அடுத்தடுத்து 3 ரயில் விபத்துகள்: ராஜினாமா செய்ய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முடிவு!
டெல்லி: அடுத்தடுத்து ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் உத்கல் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளப் பகுதிகளை சரி செய்ய எடுத்துச் சென்றனர். ஆனால் இத்தகவலை பின்னால் வந்த உத்கல் ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்கவில்லை.
இந்த அலட்சியத்தால் 23 உயிர்கள் பறிபோனது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் உத்தரப்பிரதேசத்திலேயே இன்று அதிகாலை அலிகார் அருகே மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் விபத்து
இதனால் ரயில்வே அமைச்சகம் மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் விழுப்புரம் அருகே டிராக்டர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ராஜினாமா முடிவு
இப்படி அடுத்தடுத்து ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால் இவற்றுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடியிடம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேரில் தெரிவித்தார். ஆனால் அவசரப்பட வேண்டாம்... பொறுமையாக இருங்கள் என சுரேஷ் பிரபுவிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
எதிர்பாராத விபத்துகள்
இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் பிரபு பதிவிட்டுள்ளதாவது: எதிர்பாராத ரயில் விபத்துகளால் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். உயிரிழப்புகளும் படுகாயங்களும் மிகவும் வருத்தம் தருகிறது.
|
பொறுமையாக இருக்க அறிவுறுத்தல்
இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்பதாக பிரதமர் மோடியிடம் நேரில் சந்தித்து தெரிவித்தேன். பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு சுரேஷ் பிரபு பதிவிட்டுள்ளார்.