மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் திரைச்சீலைகளை அகற்றும் ரயில்வே
டெல்லி: பாதுகாப்பு காரணங்களால், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் திரைச்சீலைகள் நீக்கப்பட்டுவருகின்றன. இதனால் பயணிகள் தங்களது தனிமையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கும் நடுவே தனித்தனியே திரைச்சீலைகள் தொடங்கவிடப்பட்டிருக்கும். இதனால் பயணிகளின் தனிமையாக இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும். ஆனால், மேல் படுக்கையில் இருக்கும் பயணிகளுக்கு இது தொந்தரவாக இருப்பதாகவும், வழிப்பாதையில் உள்ள திரைச்சீலைகள் காற்றாடிகளில் சிக்கிக் கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்தத் துணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மையுடன் இருப்பதால் விபத்து நேரிடும் சமயங்களில் ரயில் பெட்டிகளில் தீ மளமளவென பரவுவதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் நடந்த பெங்களூர்-நானட் ரயில் விபத்து உட்பட பல ரயில் தீவிபத்துகளில் திரைச்சீலைகள் முக்கிய பிரச்சினையாக விளங்கியுள்ளன.
இந்திய ரயில்வே குழுவிடமிருந்து இதுகுறித்து வந்த கடிதத்தைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரயில் பெட்டிதொழிற்சாலைகள் மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் வழிபாதையில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகளை நீக்க ஆரம்பித்துள்ளன.
இருப்பினும் ஜன்னல்களில் உள்ள திரைச்சீலைகள் அப்படியே இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.