ஒரே மழைக்கே உருக்குலைந்து போன பெங்களூர்.. மின்சாரம் கட், டிராபிக் ஜாம்!
பெங்களூர்: மழை காரணமாக பெங்களூரில் பெரும் போக்குவரத்து நெரிசலும், மின்வெட்டும் ஏற்பட்டது.
தமிழகம், புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெங்களூர் தத்தளிப்பு
இதனிடையே, நேற்று இரவு பெய்த கன மழையால் பெங்களூர் தத்தளித்தது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 9 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததாக புகார்கள் வந்தன. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் மின்வாரியத்திற்கு வந்துள்ளன. மின்வாரிய தொலைபேசி இணைப்பு தொடர்ந்து பிசியாகவே இருந்ததால் மக்கள் புகார்களை தரக்கூடிய முடியாமல் அவதிப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
ஜெயநகர், சாந்திநகர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் காற்று காரணமாக மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து பெரும் பாதிப்படைந்தது. நிருபதுங்கா சாலை, டெய்ரி சர்க்கிள், சில்க்போர்ட் சர்க்கிள் என முக்கிய பகுதிகளில் இரவு 12 மணிக்கும் கூட கடும் டிராபிக் நெரிசல் நிலவியது. வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் சரிந்தது இதற்கு காரணம்.
பயணிகள் பாவம்
இதனால் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த பத்து நாட்களாக அவ்வப்போது பெங்களூரில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நகரில் பல இடங்களில் விடியற்காலையில்தான் மின்சாரம் திரும்பியது. ஒசூர் உட்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் அடுத்த அஞ்செட்டியில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தற்காலிக பாலம் உடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட பழைய பஸ் நிலையம் முழுவதும் குளம் போல் நிறைந்து டவுன் பஸ்கள் வராமல் பல கிராமவாசிகள் தவித்தனர். கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 42 கன அடியாக உயர்ந்தது.