கேரளாவில் கனமழை: கார் மீது மரம் விழுந்து பெண் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் கனமழையில் கார்மீது மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. ஆரம்பம் முதலே மழை தீவிரமாக பெய்து வருவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை நீடிக்கிறது.
திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு போன்ற இடங்களில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. கடற்கரை பகுதியான கோவளம், விழிஞ்சம் போன்ற பகுதிகளில் கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசுவதால் மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றும் திருவனந்தபுரத்தில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் பெரிய மரங்கள் வேரோடு சாலைகளில் சாய்ந்தன.
திருவனந்தபுரத்தில் கார் மீது பெரிய மரம் விழுந்ததில் ஒரு பெண் பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் மனுகுமார் (வயது30). இவரது மனைவி மாயா (24). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாயா சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். விடுமுறையை யொட்டி அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று திருவனந்தபுரம் வந்தார். இதனால் மனுகுமார் விமான நிலையத்திற்கு சென்று மனைவியை அழைத்துக்கொண்டு கார் மூலம் வீடு திரும்பி கொண்டிருந்தார். தம்பானூர் ரெயில் நிலையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கன மழை காரணமாக ஒரு பெரிய மரம் வேரோடு சரிந்து அவர்கள் கார் மீது விழுந்தது. இதனால் கார் பலத்த சேதம் அடைந்தது. கணவன்-மனைவி இருவரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள்.
இதை பார்த்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டு மரம் வெட்டி அகற்றப்பட்டது. காருக்குள் இருந்த கணவன்-மனைவியை மீட்ட போது மாயா ஏற்கனவே உயிர் இழந்து விட்டது தெரிய வந்தது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனுகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.