கைக்குழந்தையுடன் விடிய, விடிய ரோந்துப் பணி பார்க்கும் டி.எஸ்.பி அர்ச்சனா ஜா..
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தலைநகர் ராய்ப்பூரில் பச்சிளம் குழந்தையின் தாயான டி.எஸ்.பி ஒருவர் அக்குழந்தையுடன் இரவு நேர காவல் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராய்ப்பூரின் குற்றப்பிரிவு டி.எஸ்.பியான அர்ச்சனா ஜாதான் அந்த இரும்புப் பெண்மணி. குழந்தையுடன் அதிகாலை 5 மணி வரையில் ரோந்துப் பணிகளை கவனித்து வருகின்றார் அர்ச்சனா. வேலையையும், குடும்பத்தையும் அவர் ஒருங்கே கவனிக்கின்றார் என்று தற்போது அனைவராலும் புகழப்பட்டு வருகின்றார்.
இவர் ரோந்துப் பணியில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதுமட்டுமல்ல ராய்ப்பூரின் பிலாஸ்பூர் கிராமத்திற்கு அம்மாநில முதல்வர் வந்தபோது கர்ப்பமாக இருந்த அர்ச்சனா தொடர்ச்சியாக 7 நாட்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுத் துறைகளில் பெண்களுக்கு 2 வருட பிரசவ கால விடுப்பு இருந்தாலும், மாநில அரசுத் துறைகளில் 6 மாதங்கள் மட்டுமே பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் அர்ச்சனா ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளதாலும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டிலும் யாரும் இல்லாததாலும் காரணத்தினால் கூடவே எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தன்னுடைய வேலையை சரிவர செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.