8 சிமி தீவிரவாதிகள் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை? மபிஅரசின் முரண்பட்ட தகவலால் வெடித்த சர்ச்சை!
8 சிமி தீவிரவாதிகள் போலீசாரால் திட்டுமிட்டு சிறைக்கு வெளியே அழைத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டனரா? நடந்ததாக சொல்லப்படுவது போலி என்கவுண்ட்டரா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.
சென்னை: போபாலில் 8 சிமி தீவிரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. தீவிரவாதிகள் ஆயுதங்களால் சுட்டதாக கூறுகிறது மபி காவல்துறை; ஆனால் தீவிரவாதிகளிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்கிறது மபி அரசு. இதனால் நடந்தது போலி என்கவுண்ட்டர்தானோ என்ற சர்ச்சை வெடித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் சிறையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிறைக் காவலரை கொன்றுவிட்டு 8 தீவிரவாதிகள் போர்வையை கயிறாக்கி தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இதனையடுத்து 5 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மத்திய பிரதேச அரசு அறிவித்தது.
சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பி 8 மணிநேரத்திலேயே 8 பேரும் போபால் புறநகரில் நடந்த என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போலீசார் என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக் கொல்லும் அளவுக்கு 8 தீவிரவாதிகளும் ஆயுதங்கள் வைத்திருந்தனரா? எத்தனை மணிநேரம் இந்த என்கவுண்ட்டர் நடந்தது? என்பது குறித்து எந்த தகவலும் முதலில் வெளியாகவில்லை.
என்கவுண்ட்டரின் போது தீவிரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுத விவரங்களும் இல்லை. ஆகையால் போலீசாரே திட்டமிட்டு சிறையில் இருந்து அழைத்து சென்று 8 சிமி தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனரா? அல்லது 8 சிமி தீவிரவாதிகளும் பதுங்கியிருந்த போது சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனரா? என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறுவது உண்மையா? என்ற சந்தேகங்களும் எழுந்தன.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச மாநில காவல்துறை தலைவர் யோகேஷ் சவுத்ரி, தீவிரவாதிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டர் செய்தோம் எனக் கூறியுள்ளார். ஆனால் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங், போபால் சிறையிலிருந்து தப்பிச் சென்ற 8 தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் சிமி தீவிரவாதிகள் 8 பேரும் போலி என்கவுண்ட்டரில்தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.