பலாத்கார குற்றவாளி ஆசாரம் பாபு புனித துறவியாம்: ராஜஸ்தான் பள்ளி புத்தகத்தில்
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநில பள்ளி புத்தகத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசாரம் பாபு பிரபலமான துறவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பள்ளி ஒன்றின் 3ம் வகுப்பு புத்தகத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாரம் பாபு நாட்டின் பிரபலமான துறவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பதிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நியாய உஜ்ஜாலா புத்தகத்தில் தான் ஆசாரம் பாபுவை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த குருகுல் பிரகாஷன் என்ற அந்த பதிப்பு நிறுவனத்தின் புத்தகத்தில் நாட்டின் பிரபல துறவிகள் பட்டியல் புகைப்படத்துடன் உள்ளது. புத்தர், விவேகானந்தர், அன்னை தெரசா வரிசையில் ஆசாரம் பாபுவின் புகைப்படம் உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகளில் ஒருவர் ஆசாரம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் ஆசாரம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட புகார்களை தனித்தனியே அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.