மராட்டியர் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரிக்க கட்சியினருக்கு ராஜ் தாக்கரே உத்தரவு
மும்பை: மராட்டியர்கள் அல்லாதவர்கள் புதிதாக வாங்கும் ஆட்டோக்களை எரிக்குமாறு மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா உறுப்பினர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கட்சியின் 10வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
மாநிலத்தில் புதிதாக வழங்கப்படும் ஆட்டோ பெர்மிட்களில் 70 சதவீதம் மராட்டியர் அல்லாதவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மண்ணின் மைந்தர்களுக்கே ஆட்டோ பெர்மிட் வழங்கப்பட வேண்டும்.
ஆட்டோ பெர்மிட்
அரசோ விதிமுறைகளை பின்பற்றாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் பெர்மிட் வழங்குகிறது. அப்படி செய்தால் தானே வரும் நாட்களில் 70 ஆயிரம் பெர்மிட் வழங்கலாம். ஒரு ஆட்டோவின் விலை ரூ.1.7 லட்சம். ராகுல் பஜாஜ் 70 ஆயிரம் ஆட்டோக்களை தயார் செய்து வைத்துள்ளார். அப்படி என்றால் இது ரூ. 1,190 கோடி வியாபாரம்.
எரித்துவிடுங்கள்
மராட்டியர்கள் அல்லாதவர்கள் புதிதாக வாங்கும் ஆட்டோக்களை எரிக்குமாறு கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன். ஆட்டோவில் உள்ளவர்களை கீழே இறக்கிவிட்டுவிட்டு வாகனத்தை எரித்துவிடுங்கள்.
மகாராஷ்டிரா அரசு
முன்பு இருந்த மாநில அரசுக்கும் தற்போது உள்ள பட்னாவிஸ் அரசுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முகங்கள் மட்டும் தான் மாறியுள்ளன. ஊழல், வேலை செய்யும் விதம் எல்லாம் ஒரே மாதிரி தான் உள்ளது.
வெற்றி தோல்வி
வாழ்க்கையில் வெற்றி தோல்வி சகஜம். அதனால் கட்சியினர் மனமுடையக் கூடாது. ஒவ்வொரு பெரிய மனிதரும் தோல்வியை சந்தித்துள்ளார். நம் கட்சி இப்படியே இருந்து விடாது என்றார்.