மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியில்லை: ராஜ்தாக்கரே திடீர் பல்டி!!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர் தாம் என்று அறிவித்து ராஜ்தாக்கரே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்தாக்கரே, சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. ஒட்டு மொத்த மகாராஷ்டிரா மாநிலமும் என் தொகுதியே. அதனால் ஒரு தொகுதியில் மட்டும் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் நான் போட்டியிடப் போவதில்லை. மகாராஷ்டிராவில் விதர்பா பிராந்தியத்தில் 62 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 40 முதல் 45 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம் என்றார்.