பாஜக அவ்வளவு கெஞ்சியும் தேர்தலில் போட்டியிடும் ராஜ் தாக்கரே கட்சி
மும்பை: லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று பாஜக கெஞ்சியும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறது.
சிவ சேனாவில் இருந்து பிரிந்து வந்த ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிரமன் சேனா கட்சியை துவங்கினார். 2009ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 288 சீட்களில் 13-ஐ ராஜ் தாக்கரே கட்சி வென்றது. அவரால் தான் பாஜக-சிவசேனா கூட்டணி 55 சீட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலிலும் ராஜ் தாக்கரே கட்சிக்கு கணிசமான வாக்குகள் சென்றதால் தான் பாஜக தோல்வி அடைந்தது.
இதை எல்லாம் கருத்தில் வைத்து பாஜக தலைவர் நிதின் கட்காரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ் தாக்கரேவை சந்தித்து லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சி போட்யிடுகிறது என்று ராஜ் தாக்கரே இன்று அறிவித்தார்.
மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் அவர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் 7 இடங்களில் ராஜ் தாக்கரேவின் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதில் 1 இடத்தில் பாஜக வேட்பாளரையும், 6 இடங்களில் சிவசேனா வேட்பாளர்களையும் எதிர்த்து நவநிர்மன் சேனா கட்சியினர் போட்டியிடுகிறார்கள்.
இயக்குனரும், நடிகருமான மகேஷ் மஞ்சுரேகர், பாலா நந்காவ்ன்கர், ஆதித்யா ஷிரோத்கர், ராஜு பாட்டில், அசோக் கந்தேபஹார், பிரதீப் பவார் மற்றும் தீபக் பாய்குடே ஆகியோர் தான் ராஜ் தாக்கரே அறிவித்துள்ள வேட்பாளர்கள் ஆவர்.
தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் பிரதமர் பதவிக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரிப்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.