கமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்ற ராஜ்தாக்ரே மகள்! உற்சாக வரவேற்பால் திளைத்த கமல்
மும்பை: மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேயை நடிகர் கமல்ஹாசன் நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். ராஜ் தாக்கரேயின் மகள் ஊர்வசி கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
நேற்று காலை 9.20 மணிக்கு தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள ராஜ் தாக்கரேயின் ‘கிருஷ்ணகுஞ்ச்' இல்லத்துக்கு நேரில் வந்த கமல்ஹாசனை, ராஜ் தாக்கரேயும் அவரது குடும்பத்தினரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ராஜ் தாக்கரேயின் மனைவி ஷர்மிளா தாக்கரே கமல்ஹாசனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ராஜ்தாக்ரே, கமலுக்கு சால்வை போர்த்தினார்.
ராஜ் தாக்கரேயின் மகள் ஊர்வசி கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். பெரியவர்கள் வீட்டுக்கு வந்தால் பிள்ளைகள் காலில் விழுந்து ஆசி பெருவது வட இந்திய கலாசாரம் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பின்னர் கமலும் ராஜ்தாக்கரேயும் சுமார் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து நவ நிர்மாண் கட்சியில் கமல் தன்னை இணைத்துக்கொள்ளப்போவதாக சில வதந்திகள் எழுந்தன. ஆனால் சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய கமல், ‘‘ராஜ் தாக்கரேயும் நானும் பழைய நண்பர்கள். அவரை சந்திப்பதற்காக மட்டுமே இங்கு நான் வந்தேன்'' என்றார்.