2ஜி ஊழல் வழக்கு: ஆ.ராசா, கனிமொழி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 9 பேர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நாளை (மே 28) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடைய கலைஞர் டிவிக்கு முறைகேடாக ரூ. 200 கோடி பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக மத்திய அமலாக்கத் துறை குற்றச்சாட்டு எழுப்பியது.
இதையடுத்து தயாளு அம்மாள், கனிமொழி, ஆ. ராசா, ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கே. கோயங்கா, ஆசிஃப் பல்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம், குசேகான் ரியாலிட்டி, சினியுக் மீடியா எண்டர்டெயின்மெண்ட், கலைஞர் டிவி, டிபி ரியாலிட்டி உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு எதிராகவும் மத்திய அமலாக்கத் துறை, சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ராசா, கனி ஜாமீன் மனு
இதையடுத்து மே 26ம்தேதி திங்களன்று ஆ. ராசா, கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர். அப்போது, ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி உள்பட 10 பேர் மனு தாக்கல் செய்தனர்.
தயாளு அம்மாள்
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அம்ரீந்தர் சரண், "வயோதிகம், உடல் நலக் குறைவு, மனநிலை சரியில்லாத காரணங்களால் தயாளு அம்மாள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு (குற்றப்பிரிவு சிஆர்பிசி 205-ன் கீழ்) அளிக்க வேண்டும்' என்று தெரிவிக்கும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
மே 28ல் விசாரணை
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி, "இவ்வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் புதன்கிழமை (மே 28) தொடங்கும். அதன்பின் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும்' என்று உத்தரவிட்டார்.
குற்றப்பத்திரிக்கை நகல்
மேலும், மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்களை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.