2 ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தியவர் ராசாதான்! - சிபிஐ
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தியவர், மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாதான் என்று சிபிஐ குற்றம்சாட்டியது.
சிபிஐ நீதிமன்றச் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன் நேற்று சிபிஐ சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் புதன்கிழமை ஆஜராகி முன்வைத்த இறுதி வாதத்தின்போது, "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் டாடா போன்ற நிறுவனங்களைப் புறம்தள்ளிவிட்டு, தொலைத் தொடர்பு துறையில் முன்அனுபவம் இல்லாத ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஒயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய நிறுவனங்களுக்குச் சாதகமாக, 'கட்-ஆஃப்' தேதி, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது' போன்ற நடவடிக்கைகளில் ராசா மாற்றம் செய்தார்.
இந்த விஷயத்தில் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு முடிவின்படி செயல்படுமாறு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சட்டத் துறை அமைச்சர் பரத்வாஜ் ஆகியோர் அளித்த பரிந்துரைகளைப் புறம் தள்ளிவிட்டு, ராசா தன்னிச்சையான முடிவுகளை எடுத்தார். இது தொடர்பாக 2007, நவம்பர் 2-இல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆ.ராசா கடிதம் எழுதி உள்ளார். இதன்மூலம், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தியது ஆ.ராசா என்பது நிரூபணமாகியுள்ளது' என்றார்.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோலியா, ஷாஹித் உஸ்மான் பால்வா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் விஜய் அகர்வால் ஆஜராகி முன்வைத்த வாதம்: "டாடா நிறுவனம் மீது தொடரப்பட்ட முக்கிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிபிஐ நீதிமன்றத்திலும் 2ஜி அலைக்கற்றை வழக்குடன் தொடர்புடைய எஸ்ஸார் நிறுவனத்தின் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவடையும் வரை இறுதி வாதம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது' என்றார். இதைக் கேட்ட சிறப்பு நீதிபதி சைனி, வழக்கின் விசாரணையை மே 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியம் பதிவு செய்யும் நடைமுறையை சிபிஐ நீதிமன்றம் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் 17-இல் மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.