அமலாக்கத்துறை இயக்குநர் திடீர் நீக்கம்...சோனியா, ராகுல் மீதான வழக்கை கைவிடும் முடிவால் நடவடிக்கை?
டெல்லி : அமலாக்கத்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து ராஜன் கடோச் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அப்பதவியில் கர்னல் சிங் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1938 ஆம் ஆண்டு ஜவஹர் லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது. நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கைக்குச் சொந்தமான ரூ.2000 கோடி மதிப்புள்ள நிலத்தை கையகப்படுத்தியதாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை அமலாகத்துறை விசாரித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கை சில தொழில்நுட்ப காரணங்களைக் காட்டி கைவிடுவதாக அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை இயக்குநர் பதவியிலிருந்து ராஜன் கடோச் தூக்கியடிக்கப்பட்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் பரபரப்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதியதால் தான் ராஜன் கடோச் நீக்கப்பட்டிருக்கிறார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராஜன் கடோச் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனரக தொழிற்சாலை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
எனினும் இந்தாண்டு ஜனவரி மாதம் வரை அமலாகத்துறை இயக்குநராக பதவியில் நீடிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. பின்னர் கடந்த ஜுலை மாதம் வரை ராஜன் கடோச்சுக்கு பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமலாகத்துறை இயக்குநர் பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த சூழலில் சோனியா, ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கை கைவிடுவதாக அமலாக்கத்துறை முடிவெடுத்ததையடுத்து ராஜன்கடோச்- ன் பதவிக்காலத்தை குறைத்து அமலாகத்துறை இயக்குநர் பதவிலியிருந்து நீக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக அப்பதவிக்கு கர்னல்சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.