பாய் தூஜ் அன்று சோட்டா ராஜனை பார்க்க அனுமதி கோரி சகோதரிகள் சிபிஐ கோர்ட்டில் மனு
டெல்லி: நிழல் உலக தாதா சோட்டா ராஜனை பாய் தூஜ் பண்டிகையான இன்று சந்கிக்க அனுமதி அளிக்கக் கோரிய அவரின் சகோதரிகளின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு டெல்லி நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜன் டெல்லி அழைத்து வரப்பட்டார். சிபிஐ அதிகாரிகள் சோட்டா ராஜனை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு சோட்டா ராஜனை சந்திக்க அனுமதி அளிக்குமாறு அவரது சகோதரிகள் சுனிதா மற்றும் மாலினி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்களின் மனுவை விசாரித்த சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி வினோத் குமார் சோட்டா ராஜனின் சகோதரிகளை சிபிஐ அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுக்குமாறு கூறியுள்ளார். சுனிதா மற்றும் அவரது அக்கா மாலினியின் உடல்நலம் சரியில்லாததால் அவர்களை அழைத்து வர அவர்களின் மருமகன் அனிலுக்கு அனுமதி அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வட மாநிலத்தவர்கள் தீபாவளி பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுவார்கள். பண்டிகையின் கடைசி மற்றும் 5வது நாளில் பாய் தூஜ் கொண்டாடப்படும். அன்றைய தினம் சகோதர, சகோதரிகள் சேர்ந்து பூஜை செய்வார்கள். சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைப்பார்கள். சகோதரர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.
பதிலுக்கு சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு அளிப்பார்கள். இதை தான் பாய் தூஜ் என்கிறார்கள்.