ராஜபக்சேவுக்கு மூக்குடைப்பு! டெல்லி வர விடுத்த கோரிக்கையை விக்னேஸ்வரன் நிராகரித்தார்!
டெல்லியில் 26-ந் தேதி நடைபெறும் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்கிறார்.
ஆனால் ஒட்டுமொத்த தமிழகமே மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் எதிர்ப்பை தணிக்கும் வகையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடமாகாணத்தின் முதல்வரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விக்கினேஸ்வரனை தம்முடன் அழைத்துவர மகிந்த ராஜபக்சே திட்டமிட்டிருந்தார்.
இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் ராஜபக்சே அழைப்பு விடுத்தார். ஆனால் ராஜபக்சேவின் அழைப்பை நிராகரித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கும் ஜனாதிபதி ராஜபக்சே அழைப்பு அனுப்பியுள்ளார் என்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி.
எங்களது வடமாகாண அமைச்சர்களுடன் இதுபற்றி ஆலோசித்தேன். நரேந்திர மோடியின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது வடமாகாணத்துடன் இலங்கை அரசை இணைந்து செயல்பட வைக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
வடமாகாண மக்களின் துயரங்கள், வடமாகாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் ஆகியவையே தற்போது உள்ள சூழல்கள்.
இலங்கை மத்திய அரசுக்கும் வடக்கு மாகாணத்துக்கும் நல்ல உறவு இல்லை. வடமாகாண மக்கள் மத்தியில் ராணுவத்தினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கின்றனர்.
மக்கள் இப்போதும் பதற்றத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை கட்டுப்படுத்தபப்ட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை நான் ஏற்றால் உண்மையை நிலையை மறைத்து சம்பிரதாயத்துக்கு ஏற்பதாக அமையும். அதனால் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்க இயலாது.
இவ்வாறு விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.