நம்ம ஊரு பரவாயில்ல.. ராஜஸ்தானை பொசுக்கும் வெயில்.. நாட்டிலேயே அதிகளவாக 118.4 டிகிரி பாரன்ஹீட் பதிவு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகளவாக ராஜஸ்தான் மாநிலத்தில 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருகிறது. வடகிழக்கு மற்றும் இமாச்சல், அருணாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். கடும் வெயில் சுட்டெரிப்பதால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது. இதானல் மக்கள் தண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் 118.4 டிகிரி பாரன்ஹீட்
நாட்டிலேயே அதிகளவாக ராஜஸ்தான் மாநிலம் சுறுவில் 48 டிகிரி அதாவது 118.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து இதமளித்தது.
சூறைக்காற்றில் ஒருவர் பலி
இதனால் பகல் பொழுதில் பெரும் சிரமத்திற்கு ஆளான மக்கள் மாலை நேரத்தில் பெய்த மழையால் சற்று நிம்மதியடைந்தனர்.
இதனிடையே ஜம்முவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. அப்போது மரம் ஒன்று உடைந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவரது தாயார் படுகாயமடைந்தார்.
உடைந்து விழுந்த மரங்கள்
ஜம்முவில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வைஷ்ணவிதேவி கோவிலுக்கு செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மரங்கள் விழுந்ததால் கடைகளும் சேதமடைந்தன.
டெல்லியில் இடியுடன் மழை
டெல்லியில் நேற்று 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில் டெல்லியில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோட்டாவில் 117.14 பாரன்ஹீட்
இதனிடையே ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் லேசான மழை பெய்தது. நாட்டிலேயே அதிகளவாக ராஜஸ்தான் மாநிலம் சுறுவில் 118.4 டிகிரி பாரன் ஹீட் வெப்பமும், அதற்கு அடுத்த படியாக கோட்டாவில் 117.14 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.
கொளுத்தும் வெயில்
பிகானேர், கங்காநகர், ஜெய்பூர், பார்மர் ஆகிய இடங்களிலும் 116 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. அஜ்மெர் மற்றும் ஜெய்சல்மார் ஆகிய பகுதிகளிலும் 110 டிகி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தியுள்ளது.
புதன் கிழமைக்குப் பிறகு
இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பநிலையில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று வானிலை மையம் கூறியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், விதர்பா ஆகிய இடங்களில் புதன் கிழமைக்கு பிறகு வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.