காலைக் கடன் கழித்த பெண்களை படம் பிடித்த அரசு அதிகாரிகள்.. தட்டிக்கேட்ட முதியவர் கொலை
திறந்தவெளிகளில் காலைக் கடனுக்கு சென்ற பெண்களை படம் பிடித்த அரசு அதிகாரிகளை தட்டிக் கேட்ட முதியவர் அடித்தே கொல்லப்பட்டார்.
ஜெய்ப்பூர்: புல்வெளிகளில் மலம் கழிக்க சென்ற பெண்களை படம் பிடித்த அரசு அதிகாரிகளை தட்டிக் கேட்ட முதியவரை அவர்கள் அடித்து கொன்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் நகராட்சி பகுதி தூய்மையான பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு திறந்த வெளியில் காலைக் கடன் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கழிவறைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சிலர் திறந்தவெளியில் மலம் கழிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
படம் பிடித்த அதிகாரிகள்
இதை கண்காணிக்கும் பணியை நகராட்சி செய்து வருகிறது. அந்த அதிகாரிகள் காலை, மாலை நேரங்களில் ரோந்து வந்து திறந்த வெளிகளில் மலம் கழிப்பதை படம் பிடிப்பர்.
திறந்தவெளியை பயன்படுத்தக் கூடாது
இதற்காவது மக்கள் அஞ்சி திறந்த வெளியை பயன்படுத்த மாட்டார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை பிரதாப்கார் நகராட்சி பகுதியில் உள்ள பாக்வாஸா காசி பகுதியில் சில பெண்கள் திறந்த வெளியில் மலம் கழித்தனர்.
முதியவர் தட்டிக் கேட்டார்
அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் அசோக் ஜெயின் தலைமையிலான 4 அதிகாரிகள் அங்கு வந்து அந்த பெண்களை படம் எடுத்தனர். இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த முதியவர் ஷபார்கான் (55) என்பவர் அதிகாரிகள் படம் பிடித்ததை தடுத்து நிறுத்தினர்.
முதியவர் மீது தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த ஷபார்கானை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பலியானார்.
மருத்துவ அறிக்கையில் வேறு
ஆனால் மருத்துவ அறிக்கையில் மாரடைப்பு காரணமாக இறந்தததாக குறிப்பிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த முதியவரின் சகோதரர் நூர்முகமது போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கொலை வழக்கு
இதையடுத்து நகராட்சி ஆணையர் அசோக் ஜெயின் உள்பட 4 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை.