ராஜஸ்தான்.. தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கே ஓட்டு.. மக்கள் கருத்து.. ஷாக்கில் பாஜக, காங்.
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி எழுந்துள்ள நிலையில் கட்சியை பாராமல், தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக வாக்காளர்கள் கூறியுள்ளது, இரு கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வாக்குப்பதிவு வரும் 7ம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு மிகிப்பெரிய தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரசின் சூறாவளி பிரச்சாரம் முடிந்துள்ளது.
ஏறக்குறைய நான்கே முக்கால் கோடி வாக்காளர்கள் முதலமைச்சரையும், யாரை ஆட்சியில் அமர்த்துவது என்றும் முடிவு செய்ய உள்ளனர்.
சாதி வேட்பாளர்கள்
வேட்பாளர்கள் அறிவிக்கும் முன் இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறி உள்ளது. கட்சிகளிடையேயான தேர்தல் என்ற நிலை தகர்ந்து, எந்த வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று சிந்திக்க தொடங்கி உள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சாதி வேட்பாளர்கள் என்ற முத்திரையை அவர்கள் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர்.
பிரச்சினையை முன்வைத்து இல்லை
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாக்காளர்கள், எந்த பிரச்னையை முன் வைத்தும் வாக்களிக்க போவதில்லை என்று கூறியுள்ளனர். நட்சத்திர அந்தஸ்து வேட்பாளர்களின் பிரச்சார கூட்டங்களுக்கு சென்றாலும், சொந்த ஊர் வேட்பாளர்களின் பெயர்களையோ அல்லது அவர்களை அறிமுகப்படுத்தும் போதோ எழுகிற ஆரவாரமே அதற்கு சாட்சி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திடீர் திருப்பம்
இந்த தருணத்தில், தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற மக்கள் உரிமைகளுக்கான அமைப்பு, நடத்தியுள்ள சர்வே முடிவுகளை சற்றே உற்று நோக்க வேண்டியுள்ளது. செப்டம்பர் முதல் நவம்பர் வரையான கால கட்டத்தில் அந்த அமைப்பு நடத்திய இந்த சர்வேயில் சில முக்கிய அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
வாக்காளர் மன நிலை
பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் பிரச்சாரத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்றுதான். ஆக, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை விட தமக்கு தான் அதிக ஆதரவு உள்ளது என்று எந்த கட்சியும் கூறிவிட முடியாது. இந்த ஒற்றை புள்ளியில் தான் வாக்காளர்கள், தெளிவான ஸ்திரமான மன நிலையில் உள்ளனர் என்று கூறுகிறது அந்த சர்வே.
சிந்திக்கும் மக்கள்
அனைத்தையும் உன்னிப்பாகவும், நிதானமாகவும் கவனித்து வரும் வாக்காளர்கள் இறுதியாக தான் முடிவுக்கு வருவார்கள் என்றும் அந்த சர்வே ஆணித்தரமாக கூறுவது சற்றேற குறைய சிந்திக்க வைப்பதாக உள்ளது. குறிப்பாக கிராம பகுதிகளில் இத்தகைய நிலைப்பாடுகள் அதிகம் என்பது தான். ஆக மொத்தத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி என்பது அவ்வளவு எளிதான அல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.