கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் நாளை சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம்
ஜெய்ப்பூர்: கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரான சி.ஏ.ஏ.வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியது அத்தீர்மானம்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் நாளை நிறைவேற்றப்பட இருக்கிறது.
இது தொடர்பாக ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியதாவது: ராஜஸ்தான் சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. மத்திய அரசு சி.ஏ.ஏ. குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சி.ஏ.ஏ.வை ஆதரிப்பதா? தேனியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல்
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடுகிற உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. ஆனால் இப்படி போராட்டம் நடத்துகிறவர்களை தேசவிரோதிகளாக முத்திரை குத்துகிற போக்கு நிலவுகிறது.
தற்போது சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டங்கள் ஒரு கட்சியினரால் நடத்தப்படவில்லை. பல்வேறு அமைப்புகள் குறிப்பாக இளைஞர்கள் இப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே கேரளா, பஞ்சாப் மாநில சட்டசபைகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.