ராஜஸ்தானில் பின் வாங்கிய பாஜக...விளாசிய அசோக் கெலாட்...மடங்கிய சச்சின்!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதில்லை என்று அந்த மாநில பாஜக தெரிவித்துள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்த நிலையில், திடீரென தற்போது பின் வாங்கியுள்ளது. இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த சிக்கலுக்குப் பின்னர் இன்று முதன் முறையாக அவை கூடி இருக்கிறது. காங்கிரஸ் சட்ட அமைச்சர் சாந்தி குமார் தாரிவால் கொண்டு வந்து இருந்தார். இதன் மீது காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதுகுறித்து சச்சின் பைலட் கூறுகையில், ''நம்பிக்கை வாக்கெடுப்பு அரசால் கொண்டு வரப்பட்டது. இதில் காங்கிரஸ் ஆட்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பல்வேறு சதி செயல்களுக்கும் இடையே அரசுக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் அரசு மீதான பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எழுப்பி இருந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.
முன்பு அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருந்தேன். இப்போது இல்லை. எங்கு நாம் அமருகிறோம் என்பது முக்கியல் இல்லை. ஆனால், மக்களின் இதயங்களில், மனதில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். சபையில் நான் அமரும் இடத்தை சபாநாயகரும், கட்சியும்தான் முடிவு செய்வார்கள். அதுகுறித்து நான் எதையும் கூற விரும்பவில்லை'' என்றார்.
ராஜஸ்தான் சட்டசபை...இடம் மாற்றம்...சச்சினின் துணிச்சல் வீரர் பேச்சு!!.
இதற்கு முன்னதாக அவையில் பேசி இருந்த முதல்வர் அசோக் கெலாட், ''நாட்டில் பல சமயம் கட்சிக்குள் அரசியல் வேற்றுமை இருந்துள்ளது. அது உங்களது கட்சிக்கும் (வசுந்த்ரராஜே சிந்தியா முதல்வராக இருந்தபோது) ஏற்பட்டுள்ளது. நாட்டில் தொலைபேசியை பதிவு செய்யும் கலாச்சாரம் இதற்கு முன்பு இல்லை. நீங்கள் கர்நாடகாவில், கோவாவில், மத்தியப்பிரதேசத்தில், மணிப்பூரில் என்ன செய்தீர்கள். ஜனநாயகம் பற்றி உங்களுக்கு கவலையில்லை. இந்தியாவை இன்று இருவர்தான் ஆட்சி செய்து கொண்டு வருகின்றனர். மாநிலத்தில் பைரோன்சிங் ஷெராவத் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது ஆட்சியை கவிழ்க்க சதி நடந்தது. நான் பிரதமரை சந்தித்து, ஆளுநரை சந்தித்து அதுமாதிரியான செயலில் ஈடுபட மாட்டேன் என்று கூறினேன். டெல்லி தலைவர்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. என்னுடைய எம்.எல்.ஏ.க்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்'' என்றார்.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், ஆட்சி அமைக்க 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்த்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
பாஜகவுக்கு 72 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ராஷ்டிரிய லோக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மூவர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக உறுபினர்களின் ஆதரவு இருக்கிறது. இதனால், அசோக் கெலாட் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வறுவதற்கு பாஜக பின் வாங்கியுள்ளது. இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோற்கடிக்கப்பட்டால், மீண்டும் ஆறு மாதங்களுக்கு கொண்டு வர முடியாது என்பதால், பாஜக முடிவை மாற்றிக் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.