'சூப்பர்'.. திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் செய்த உன்னத செயல்.. நெகிழ்ந்துபோன விருந்தினர்கள்!
ஜெய்ப்பூர்: தொழில்நுட்பம் விரல் நுனியில் வந்து விட்ட இந்த நவீன யுகத்திலும் வரதட்சணை என்னும் நடைமுறையை இந்தியாவில் இருந்து துரத்தி அடிக்க முடியவில்லை. வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பல பெண்கள் திருமணம் முடியாமல் உள்ளனர்.
மேலும் திருமணம் முடிந்தாலும் வரதட்சணை கொடுமை காரணமாக நாட்டில் வருடம்தோறும் பல பெண்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுகின்றன. சில பெண்களின் இல்லற வாழ்க்கை பாதியில் முடிந்து விடுகிறது.
வீடுகட்ட சேமித்து வைத்திருந்த.. ரூ.5 லட்சத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த ஊழியர் தற்கொலை.. தொடரும் சோகம்
ராஜஸ்தான் மணப்பெண்
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தந்தை தனக்காக சேமித்து வைத்திருந்த ரூ.75 லட்சம் வரதட்சணை பணத்தை மாணவிகள் விடுதி கட்ட பயன்படுத்த கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் நகரை சேர்ந்தவர் கிஷோர் சிங் கனாட். இவரது மகள் அஞ்சலி கன்வார். இவருக்கும் பர்வீன் சிங் என்பவருக்கும் கடந்த 21-ம் தேதி திருமணம் நடந்தது.
தந்தையிடம் வேண்டுகோள்
பொதுவாக பெண் குழந்தைகள் பெற்ற தந்தைகள் செய்வது போலவே, கிஷோர் சிங் கனாட்டும் மகளின் திருமணத்துக்காக, வரதட்சணை கொடுப்பதற்காக 75 லட்சம் ரூபாயை அவர் சேமித்து வைத்திருந்தார். பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியில் தனது வரதட்சணைக்காக ஒதுக்கிய பணத்தை பெண்கள் விடுதி கட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று அஞ்சலி கன்வார் திருமணத்துக்கு முன்பே தனது தந்தையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
திருணம் முடிந்த உடன்...
அவரது தந்தையும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். திருமண சடங்குகள் முடிந்த பிறகு மணப்பெண் அஞ்சலி கன்வார் தாராதாரா மடத்தின் தலைவர் மகந்த் பிரதாப் புரியிடம் தனது விருப்பதை தெரிவித்தார். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்களிடம் மணப்பெண்ணின் உன்னத செயலை மகந்த் பிரதாப் சிங் கூறினார். இதனை தொடர்ந்து காசோலை ஒன்றை மகளுக்கு கொடுத்த தந்தை கிஷோர் சிங், விரும்பிய பணத்தை நிரப்பிக் கொள்ளுமாறு கூறினார். மணப்பெண்ணின் உன்னத செயலை அங்கு இருந்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
தந்தை-மகளின் தன்னலமற்ற செயல்
கிஷோர் சிங் கானோட் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள சாலையில் பெண்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ.1 கோடி மானியமாக அறிவித்திருந்தார். இருப்பினும் கட்டுமானத்தை முடிக்க ரூ.50 முதல் ரூ.75 லட்சம் வரை கூடுதல் நிதி தேவைப்பட்டது. தற்போது இந்த பணத்தை அவர் மகள் கொடுத்துள்ளார். தந்தை-மகளின் தன்னலமற்ற செயல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் பெண்களின் கல்வியை ஆதரிப்பதற்காக அவர்கள் இருவரையும் நெட்டிசன்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.