முதல்வரும், துணை முதல்வருமே இப்படி மோதிகிட்டா எப்படி.. காங்கிரஸ் கதியை பாருங்க
ஜெய்ப்பூர்: தனது மகன் வைபவ் கெலாட், லோக்சபா தேர்தலில் பெற்ற தோல்விக்கு, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான, சச்சின் பைலட்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்.
6 மாதங்கள் முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், வசுந்தரராஜே தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அப்போது அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் நடுவே, முதல்வர் பதவிக்கு கடும் போட்டா போட்டி இருந்தது.
இழுபறிக்கு பிறகு, இறுதியாக, சீனியரான, அசோக் கெலாட்டை முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
ராஜஸ்தானில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மோதல்... உட்கட்சி பூசல்
காங்கிரஸ் காலி
ராஜஸ்தானில் 25 தொகுதிகளையும் பாஜக வென்றுவிட்டது. ஜோத்பூரில், போட்டியிட்ட, அசோக் கெலாட் மகன் வைபவும் இந்த தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. ஜோத்தபூர் தொகுதியிலிருந்து, அசோக் கெலாட், 5 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் வைபவ் வெற்றி மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது.
ஜோத்பூர் தோல்வி
இந்த நிலையில், ஏபிபி டிவி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், வைபவ் தோல்விக்கு, சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும். ஜோத்பூரில் காங்கிரஸ் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என சச்சின் பைலட் என்னிடம் கூறியிருந்தார். எனவே, அந்த தொகுதி கட்டுப்பாடு முழுக்க அவர் பொறுப்பில்தான் கொடுத்திருந்தேன். தேர்தல் தோல்விக்கு முதல்வர் மட்டுமில்லை, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும் இணைந்தே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி கோபம்
சில நாட்கள் முன்பாக டெல்லியில், ராகுல் காந்தியை அசோக் கெலாட் சந்தித்து, தேர்தல் தோல்வி பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது, வைபவ் போட்டியிட்ட ஜோத்பூர் தொகுதியில் மட்டுமே, அசோக் கெலாட் கவனம் செலுத்தியதாகவும், பிற தொகுதிகளில் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை என்றும், ராகுல் காந்தி கடிந்து கொண்டதாக தகவல் வெளியானது.
அபார வெற்றி
இந்த நிலையில்தான், அசோக் கெலாட், தேர்தல் தோல்வியில், சச்சின் பைலட்டுக்கும் பொறுப்பு இருப்பதாக கூறியுள்ளார். ஜோத்பூர் தொகுதியில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாஜக சார்பில் வெற்றிவாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டு வித்தியாசம், எவ்வளவு தெரியுமா? சுமார் 4 லட்சம்.