ராஜஸ்தான் சட்டசபை.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு.. முதல்வர் அசோக் கெலாட் திட்டம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் இன்று காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஒருவழியாக ஒரு மாதமாக நடந்து வந்த ராஜஸ்தான் அரசியல் மோதல் முடிவிற்கு வந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் , முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக களமிறங்கி தற்போது மீண்டும் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இவர் ஆட்சிக்கு எதிராக திரும்பிய காரணத்தால், இவரின் துணை முதல்வர் பதவி மற்றும் காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செய்த சமாதானத்தை தொடர்ந்து சச்சின் பைலட் தனது ஆதாரவாளர்களுடன் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபையில் இன்று காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சட்டசபையின் முதல் நாளே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அசோக் கெலாட் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள்.
அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உறுதியாக இருக்கிறது. இந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் கண்டிப்பாக அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த நிலையில் பாஜகவிற்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார்.
சும்மாவே கட்டி உருளுவாங்க.. சுதா நியமனத்தில் வெடித்து கிளம்பும் பூசல்.. தமிழக காங்கிரஸில் பரபரப்பு
ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் சேர்த்து மொத்தம் 107 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 124 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
பாஜக கட்சிக்கு அங்கு 72 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பாஜக கூட்டணிக்கு 75 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இன்று அங்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.