தனது யோகா குருவை வைத்து யோகா தின நிகழ்ச்சி நடத்திய ராஜஸ்தான் முதல்வர்
ஜெய்பூர்: சர்வதேச யோகா தினத்தன்று ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே யோகா செய்து அசத்தினார்.
சர்வதேச யோகா தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவி சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சர்வதேச யோகா தினத்தன்று ஜெய்பூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பொதுமக்களுடன் சேர்ந்து அவர் பல்வேறு ஆசனங்களை எளிதில் செய்தார். மேடையில் ராஜேவின் யோகா குரு ஆசனங்களை செய்ய செய்ய அவரை பார்த்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் யோகா செய்தனர்.
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற ஐ.நா. சபை ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.