லலித் மோடிக்கு உதவிய விவகாரம்... அமித்ஷாவுடன் சுஷ்மா, வசுந்தரா முக்கிய ஆலோசனை!
டெல்லி: தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா ஆகியோர் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நிதி மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவினரால் தேடப்படும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் வியாபம் ஊழல் நடைபெற்ற மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்.
ஆனால் பாரதிய ஜனதாவும், மத்திய அரசும் இவர்களுக்கு ஆதரவாக உள்ளன. இந்த விவகாரம் நாளை கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்க இருக்கிறது.
இதனை எதிர்கொள்வது குறித்து பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ரஜே சிந்தியாவும் கலந்து கொண்டார். எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்த பிறகு அமித்ஷாவும் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோரும் பிரதமர் மோடியை சந்தித்தும் பேசினார்.