ராஜஸ்தான் முதல்வர் யார்?.. கெலாட்டா அல்லது பைலட்டா.. நாளை தெரியும்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 199 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் முன்னணியில் உள்ளது. அவற்றில் 86 தொகுதிகளில் முன்னிலையும் 15 தொகுதிகளில் வெற்றியும் பெற்றுவிட்டது.
பாஜகவோ வெறும் 71 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியே ஆட்சியமைக்கிறது. பாஜக ஆட்சியைப் பறி கொடுக்கிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
முதல்வராக சச்சின் பைலட்டே வருவார் என்று பொது எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் தற்போது அசோக் கெலாட் பெயர் அடிபடுகிறது. ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் கெலாட், பைலட் இருவருமே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இதனால்தான் காங்கிரஸுக்கு அங்கு வெற்றி சாத்தியமானது.
கெலாட் வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர். ராஜஸ்தான் முதல்வராக 2 முறை பதவியும் வகித்துள்ளார். சச்சின் பைலட் இளம் தலைவர், துடிப்புடன் செயல்படக் கூடியவர். இருவரில் ஒருவரை ராகுல் காந்தி தேர்ந்தெடுப்பார். அவர்களில் யார் அடுத்த முதல்வர் என்பது நாளை தெரிய வரும்.