ராஜஸ்தானில் காங். ஆட்சியை கவிழ்க்கிறது பாஜக- ரூ25 கோடி பேரம்- எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டில் அடைப்பு
ஜெய்ப்பூர்: மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம் தமது கட்சி எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் பாணியில் ரிசார்ட்டில் அடைத்து வைத்திருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வந்தது.
இறுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவை வளைத்தது பாஜக. சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது.
இதனையடுத்து குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து பாஜக விளையாடி வருகிறது. இந்த விளையாட்டில் சிக்கிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதேபோல் தற்போது ராஜஸ்தானிலும் முதல்வர் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ரூ25 கோடி வரை பாஜக பேரம் பேசியுள்ளது. முதல் கட்டமாக ரூ15 கோடியும் ஆட்சியை கவிழ்த்த பின் ரூ10 கோடியும் தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக உறுதி அளித்திருக்கிறது.
காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு- 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் நீர்மட்டம்
Recommended Video
இதற்காக டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது இவ்வாறு கெலாட் கூறினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் 90 எம்.எல்.ஏ.க்களும் தமிழகத்தின் கூவத்தூர் முகாம் பாணியில் ஷிவ் -விலாஸ் எனும் ரிசார்ட்டில் மொத்தமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.