102 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.. உடனே சட்டசபையை கூட்டுங்கள்.. ஆளுநருக்கு ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை!
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 102 பேர் எனக்கு ஆதரவு தருகிறார்கள், இதனால் உடனே சட்டசபையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அனுமதி அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் எப்போது சட்டசபை கூட்டப்படும் என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அங்கு உடனே சட்டசபையை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 102 பேர் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அவசரமாக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதற்கான காரணத்தை அரசு தெளிவாக தெரிவிக்கவில்லை என்று கூறி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டசபையை கூட்ட மறுப்பு தெரிவித்துவிட்டார்.
ராஜஸ்தான்.. சட்டசபையை ஏன் அவசரமாக கூட்ட வேண்டும்? காரணம் கேட்கும் ஆளுநர்.. முதல்வருக்கு சிக்கல்!
ஆளுநரின் இந்த முடிவிற்கு எதிராக நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து மணி நேரம் போராட்டம் செய்தனர். ராஜஸ்தான் ஆளுநர் மாளிகை முன் இவர்கள் போராட்டம் செய்தனர். ஆளுநரின் இந்த முடிவிற்கு தற்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதில் அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 102 பேர் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். ஆனால் ஆளுநர் சட்டசபையை கூட்டவில்லை.
அவர் பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக செயல்பட மறுக்கிறார். நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்து விட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஒருநாள் முழுக்க காத்து இருந்தும் கூட அவர் நேர்மையான முடிவை எடுக்கவில்லை. பாஜகவின் அழுத்தம் இதற்கு பின் இருக்கிறது. சட்டசபையை கூட்டாமல் இருப்பதற்கு கொரோனாவை எல்லாம் காரணம் சொல்கிறார்.
கொரோனாதான் காரணம் என்றால், நாங்கள் எல்லோரும் கொரோனா சோதனை மேற்கொள்ள கூட தயார். நாங்கள் எங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் பாஜக இதற்கு அனுமதி அளிக்கவில்லை. சட்டத்தை மதித்து ஆளுநர் நடக்க வேண்டும். ஆனால் அவர் சட்டத்தை மீறுகிறார். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநருக்கு சட்டசபையை கூட்ட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆளும் தரப்பு கோரிக்கை வைத்தால் உடனடியாக ஆளுநர் சட்டசபையை கூட்ட வேண்டும். அதை தடுக்க கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இதனால் அவர் விரைவில் சட்டசபையை கூட்ட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.