ராஜஸ்தான்.. சட்டசபையை ஏன் அவசரமாக கூட்ட வேண்டும்? காரணம் கேட்கும் ஆளுநர்.. முதல்வருக்கு சிக்கல்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அவசர அவசரமாக சட்டசபையை கூட்ட காரணம் எதுவும் இல்லை, இதற்கான சரியான காரணத்தை மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவிக்கவில்லை என்று அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு சட்டசபையை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக முயன்று வருகிறார்.
அதேபோல் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை உடனே தகுதி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளார். ஆனால் சட்டசபையை கூட்ட தொடர்ந்து ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
உண்மை தானாக வெளியே வரும்.. உடனே ராஜஸ்தான் சட்டசபையை கூட்டுங்கள்.. மௌனம் கலைத்த ராகுல் காந்தி!
என்ன சொன்னார்
தனக்கு மொத்தம் 102 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதனால் உடனே சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அவர் திட்டமிட்டு வருகிறார். இதற்காக ஆளுநரிடம் நேற்று அவர் கோரிக்கையும் வைத்தார் . ஆனால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. சட்டசபை இப்போது அவசரமாக கூட்ட எந்த காரணமும் இல்லை. முதல்வர் அசோக் கெலாட் இதற்கான காரணத்தை சொல்லவில்லை என்று ஆளுநர் கூறியுள்ளார்.
முக்கிய கடிதம்
இதற்காக ஆளுநர் மிஸ்ரா, அரசுக்கு முக்கியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எல்லோரும் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள். சட்டசபையை கூட்ட வேண்டும் என்று முதல்வர் சார்பாக எங்களுக்கு கடிதம் வந்துள்ளது. ஆனால் அதில் ஏன் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
தெளிவு இல்லை
அதேபோல் எப்போது சட்டசபையை கூட்ட வேண்டும் என்றும் கூறவில்லை. மேலும் இதற்கான அமைச்சரவை பரிந்துரையும் இடம்பெறவில்லை. அவசரமாக சட்டசபையை கூட்டுவதற்கான முகாந்திரம் இருப்பதாக, அரசு தனது கடிதத்தில் குறிப்பிடவில்லை. எம்எல்ஏக்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா காலத்தில் எப்படி சட்டசபையை கூட்டுவது என்று தெரியவில்லை, என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .
5 மணி நேர போராட்டம்
இதையடுத்து நேற்று 5 மணி நேரம் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இருக்கும் ராஜ்பவன் எதிரான முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போராட்டம் செய்தனர். உடனே சட்டசபையை கூட்ட வேண்டும் என்று போராட்டம் செய்தனர். அதன்பின் சட்டத்திற்கு செயல்பட்டு முடிவு எடுப்பேன். அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன், என்று ஆளுநர் உறுதி அளித்தார். இதையடுத்து அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் கைவிடப்பட்டது.