அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா வசுந்தரா ராஜே...?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அரசக் குடும்பத்தை சேர்ந்த வசுந்தரா ராஜே இரண்டு முறை ராஜஸ்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது பாஜக தேசியத் துணை தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
கடந்த சில மாதங்களாக கட்சிப்பணிகளில் வசுந்தரா ராஜே ஆர்வம் காட்டாததால் அது குறித்து பாஜக தலைமை விசாரித்துள்ளது.
புறக்கணிப்பு
மேலும், சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தீனத் தயாள் உபாத்யாய் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நிகழ்ச்சி நடந்த தினத்தில் வசுந்தரா ராஜே வீட்டில் தான் இருந்துள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கட்சித் தலைமைக்கு தகவல் அளித்துள்ளார்.
அகற்றம்
இதையடுத்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வசுந்தரா ராஜே படம் அகற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் பைரோன் சிங் செகாவத் உள்ளிட்டோர் படங்கள் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்து அகற்றப்படாத நிலையில் வசுந்தரா ராஜேவின் படம் மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
அதிருப்தி
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியாவுக்கும், வசுந்தரா ராஜேவுக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் சதீஷ் பூனியா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வசுந்தரா ராஜே தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், அவருக்கு கட்சித் தலைமை முக்கியத்துவம் தருவதை வசுந்தரா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஓய்வு முடிவு?
தனது படம் கட்சி அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டது வசுந்தரா ராஜேவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்ததால், அவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெறும் எண்ணத்திற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் முக்கிய தலைவராக திகழும் ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த அத்தை வசுந்தர ராஜே என்பது குறிப்பிடத்தக்கது.