11 மாத குழந்தையாக இருக்கையில் நடந்த திருமணத்தை ஏற்க மறுத்த பி.ஏ. மாணவிக்கு ரூ.16 லட்சம் அபராதம்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 11 மாத குழந்தையாக இருக்கையில் தனக்கு நடந்த பால்ய விவாகத்தை ஏற்க மறுத்த கல்லூரி மாணவிக்கு பஞ்சாயத்து ரூ.16 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் லுனி தாசிலில் உள்ள ரோஹிசன் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தாதேவி மேக்வால்(19). அவர் தனது பெற்றோருடன் ஜோத்பூரில் வசித்து வருகிறார். ஜோத்பூரில் உள்ள பிரபல கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் அவருக்கு தான் 11 மாத குழந்தையாக இருக்கையில் பால்ய விவாகம் நடந்தது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் திருமணத்தை செல்லாததாக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார். இது தொடர்பாக அவர் சாரதி அறக்கட்டளையை அணுகி சட்ட உதவி செய்யுமாறு கேட்டார். இது குறித்து அறிந்த தேவியின் மாமனார், மாமியார் அவரை மிரட்டியுள்ளனர்.
இது குறித்து தேவி கூறுகையில்,
எனக்கு 16 வயது இருக்கையில் தான் நான் 11 மாத குழந்தையாக இருக்கையில் 9 வயது சிறுவனுக்கு மணம் முடித்து வைத்தது தெரிய வந்தது. எனக்கு நினைவில் இல்லாத அந்த திருமணத்தை ரத்து செய்ய விரும்புகிறேன். இதை அறிந்த எனது மாமனார், மாமியார் எங்களை மிரட்டுகிறார்கள். அவர்களின் மிரட்டலுக்கு நான் அஞ்சவில்லை என்பதை தெரிந்து பஞ்சாயத்து எனக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதித்து எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டது.
நான் படித்து ஆசிரியையாக விரும்புகிறேன் என்றார்.
தேவியின் தந்தை பத்மராம் ஒரு கொத்தனார். அவர் தனது மகள் நன்றாக படித்து சமூகத்தில் மதிப்புடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.