லலித் மோடியுடன் சேர்ந்து அரண்மனையையே அமுக்கிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரரஜே!!
டெல்லி: ஐ.பி.எல். ஊழல் முறைகேட்டில் சிக்கி தலைமறைவாக இருக்கும் தேடப்படும் குற்றவாளியான லலித் மோடியுடன் சேர்ந்து புகழ்வாய்ந்த தோல்பூர் அரண்மனையை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிங் கபளீகரம் செய்திருப்பதாக கூறி ஆவணங்களை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ்.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் அரண்மனை முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங்குக்கு சொந்தமானது என்று பாஜக கூறுவதை ஏற்க முடியாது. தோல்பூர் சமஸ்தானத்தின் சொத்துகள் இந்தியாவிடம் இணைக்கப்பட்டபோது அந்த அரண்மனையும் அரசுடன் இணைக்கப்பட்டது.
அரசின் சொத்து அரண்மனை
கடந்த 1949-ம் ஆண்டு ஆவணப்படி தோல்பூர் அரண் மனை அரசின் சொத்தாகும். ஆனால் அப்போதைய மகாராஜா உதய்பான் சிங் அவரது ஆயுள்வரை அந்த சொத்தை அனுபவிக்கலாம். இதுதொடர்பான ஆவணங்களை இப்போது வெளியிட்டுள்ளோம். முதல்வர் வசுந்தரா ராஜே வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் அவரது கணவர் ஹேமந்த் சிங், தோல்பூர் அரண்மனை ராஜஸ்தான் அரசின் சொத்து என்று நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மேலும் இந்த அரண்மனை அரசுக்கு சொந்தமாக இருந்ததாக, கடந்த 1954 முதல் 2010-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தின் ஆவணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன.
லலித் மோடியுடன் சேர்ந்து..
ஆனால் வசுந்தரா மற்றும் லலித் மோடி ஆகியோரின் கூட்டு நிறுவனமான நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல், அந்த அரண்மனையை கடந்த 2009-ல் அபகரித்துக் கொண்டது. பின்னர் ரூ.100 கோடியை முதலீடு செய்து அரண்மனையை சொகுசு ஹோட்டலாக மாற்றி உள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, வசுந்தரா ராஜே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்தில் தனக்கு பங்குகள் இருப்பதாகக் குறிப் பிட்டுள்ளார். மேலும் தனது மகனும் எம்.பி.யுமான துஷ்யந்த் சிங், மருமகள் நிஹாரிகா மற்றும் லலித் மோடி ஆகியோருக்கும் பங்குகள் இருப்பதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.
நட்ட ஈடு
அரண்மனைக்கு அருகே இருந்த 500 மீட்டர் நிலத்துக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து துஷ்யந்த் சிங் ரூ. 2 கோடியை இழப்பீடாக பெற்றுள்ளார்.இதுவும் ஊழல்தான். இதை விசாரிக்க வேண்டும். துஷ்யந்துக்கு இந்த இழப்பீடு கொடுக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது.வசுந்தராவை பதவி நீக்கம் செய்ய பாஜக தவறினால் அதுவரை அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், விவரங்களை காங்கிரஸ் தொடர்ந்து வெளியிடும்.
மொரீஷியஸ் வழி...
லலித் மோடி, தனியார் நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டுசேர்ந்து தோல்பூர் அரண்மனையை சட்டத்துக்கு புறம்பாக வசுந்தரா ஆக்கிரமித்துள்ளார். லலித் மோடி, வசுந்தரா குடும்பத்தினர் இணைந்து கூட்டாக வைத்துள்ள நிறுவனத்தில் சட்டவிரோதமாக முதலீடு செய்ய மொரீஷியஸ் நாட்டை லலித் மோடி பயன்படுத்தியுள்ளார்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
பா.ஜ.க. மறுப்பு
ஆனால் வசுந்தரா ராஜே மீதான காங்கிரசின் குற்றச்சாட்டை ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் அசோக் பர்மானி, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரதோர் ஆகியோர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ஹேமந்த் சிங், தோல்பூர் அரண்மனையை தனது மகன் துஷ்யந்த் சிங் வசம் ஒப்படைத்துள்ளார். இதற்கு நீதிமன்ற ஆதாரம் உள்ளது. வசுந்தரா ராஜே தவறான தகவல்களை தருகிறார் என்று தற்போது ஹேமந்த் சிங் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அரண்மனையை மகனிடம் ஒப்படைத்தது பற்றி ஹேமந்த் சிங் கையெழுத்திட்ட அத்தனை வாக்குமூலங்களும் எங்களிடம் உள்ளன என்றனர்.