எந்த முதல்வரும் இப்படி பேசியதில்லை.. ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? ஆளுநர் பரபரப்பு கடிதம்
ஜெய்ப்பூர்: ஆளுநரை, அரசே பாதுகாக்காவிட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? என்று கடுமையான கேள்வியை முன்வைத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு, கடிதம் எழுதியுள்ளார் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா.
ராஜஸ்தானில் ஆளும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு கலகம் செய்து வருகிறது.
மொத்தம் 200 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் தனக்கு போதிய பெரும்பான்மை பலம் இருப்பதால் சட்டசபையில் அதை நிரூபிக்க விரும்புவதாக அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டசபைக் கூட்டம்...முரண்டு பிடிக்கும் கெலாட்...அமைதி காக்கும் ஆளுநர்!!
அசோக் கெலாட்
இதையடுத்து, சட்டசபையை கூட்ட வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை சட்டசபையை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, குதிரை பேரம் நடந்துவிடக்கூடாது என்ற அச்சம் அசோக் கெலாட் தரப்புக்கு இருக்கிறது.
ராஜ்பவனில் போராட்டம்
இதையடுத்து சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையில், அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த போராட்டம் நடைபெற்றது. இதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா காட்டமாக, முதல்வருக்கு, ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு இருக்கிறதா?
ஆளுநர், எழுதியுள்ள கடிதத்தில், சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுப்பது பற்றி நான் வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதற்கு முன்பாக ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று நீங்கள் அறிவித்துள்ளார்கள். நீங்களும், உங்களது உள்துறை அமைச்சகமும் மாநில ஆளுநரை பாதுகாக்க முடியாவிட்டால், இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஆளுநரின் பாதுகாப்புக்கு வேறு யாரை அணுக வேண்டும்? எந்த ஒரு முதல்வரிடமிருந்தும் இது போன்ற ஒரு வார்த்தையை நான் கேட்டதே கிடையாது. ஆளுநர் மாளிகையில் எம்எல்ஏக்கள் போராடுவது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடாதா? இவ்வாறு ஆளுநர் அந்த கடிதத்தில் கடுமையாக முதல்வரை விமர்சனம் செய்துள்ளார்.
அரசுக்கு எச்சரிக்கை
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்று ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, ஆளுநர் பரிந்துரை செய்ய முடியும். எனவே ஆளுநரின் இந்த வார்த்தை அரசுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அசோக் கெலாட் vs சச்சின் பைலட் என்ற நிலை மாறி, ஆளுநர் vs முதல்வர் என்ற நிலை ராஜஸ்தானில் உருவாகியுள்ளது. ராஜஸ்தான் அரசியலின் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், ஆளுநரின் இந்த காட்டமான கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.