பசுமை பட்டாசுகளை வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு அனுமதி - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு
ராஜஸ்தானில் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பசுமை பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவில் ராஜஸ்தான் மாநில அரசு திருத்தம் செய்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 24 கோடி.. 100 கோடி டோஸ் தடுப்பூசியை நெருங்கும் இந்தியா
ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. பட்டாசு விற்பனைக்கு விதித்த தடைகளை நீக்குமாறு ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, ஹரியானா ஆகிய நான்கு மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் கொரோனாவால் நாடு முழுவதும் சிறு,குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றான பட்டாசு தயாரிக்கும் தொழிலும் அடங்கும். இதனை நம்பி மட்டும் 8 லட்சம் பேர் உள்ளனர். காற்று மாசுபாடு காரணமாக உங்களின் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும், உச்சநீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி வழங்க கேட்டுக் கொள்கிறேன்
தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்ததையேற்று ராஜஸ்தான் மாநில அரசு தனது முந்தைய உத்தரவில் திருத்தம் செய்துள்ளது. அதன் படி, பசுமை பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பசுமை பட்டாசு உபயோகத்திற்கு தடையில்லை என அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தான் எழுதிய கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பட்டாசு விற்பனைக்கு தடையை அசோக் கெலாட் நீக்கியதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் அசோக் கெலாட் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ள அவர், வாழ்வாதாரத்துக்கு பட்டாசுத் தொழிலையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் கனிவுமிகு உங்கள் அன்பு ஒளியேற்றும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுக்கு விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பட்டாசு தொழில் நலிவடைந்துள்ள நிலையில், சுமார் 10லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகாசியில் 5 லட்சம் குடும்பங்கள் பட்டாசு தொழிலை நம்பி இருப்பதாகவும் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம் செய்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பேரியம் உப்பை ஏன் பட்டாசு தொழிற்சாலைகளின் கிடங்கில் வைத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர். பின்னர், பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,தீபாவளி கொண்டாட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இல்லை என தெரிவித்தனர்.