நான் ஏழை... வீடுகளில் அதிகாரத் திமிருடன் எழுதி குடிமக்களை அவமதிக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு!
ரேஷன் பொருட்களைப் பெறுகிறவர்கள் வீடுகளின் சுவர்களில் நான் ஏழை என திமிருடன் எழுதிவைத்து அவமானப்படுத்தியுள்ளது ராஜஸ்தானை ஆளும் பாஜக அரசு.
ஜெய்ப்பூர்: வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெறுபவர்களின் வீடுகளில் நான் ஏழை.. நான் மிகவும் ஏழை என எழுதிவைத்து அவமானப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநில ஆளும் பாஜக அரசு.
தேசத்தின் குடிமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றத்தான் அரசாங்கம் என்பது உள்ளது. ஜனநாயக நாட்டில் அரசாங்கம் என்பதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாகத்தான் இருக்கிறது.
எதுவும் பிச்சை அல்ல
அரசுகளின் திட்டங்கள் அனைத்துமே மக்களின் நலன்களுக்காகவைதான். அரசாங்கத்தில் இருப்பவர்களும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் போடும் பிச்சை அல்ல இந்த திட்டங்கள்.
விலையில்லா..
தமிழகத்தில் 'இலவசம்' என்ற சொல்லே அவமானகரமானது என்பதால் அத்தகைய இலவச பொருட்களை 'விலையில்லா' என்றே உச்சரிக்கிறோம். ஆனால் பாஜக ஆளும் ராஜஸ்தானில் அதிகாரத் திமிருடன் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
நான் ஏழை ..
ரேஷன் பொருட்களை பெறுகிற வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்க்கிற மக்களின் வீடுகளின் சுவர்களில், 'நான் ஏழை- நான் மிகவும் ஏழை' என்ற வாசகங்களை கொழுப்பெடுத்து எழுதி வைத்திருக்கிறது அதிகாரக் கும்பல். இதனால் சமூகத்தில் கேலிபொருட்களாக பல லட்சம் மக்களை பாஜக அரசு ஆளாக்கி கேவலப்படுத்தியிருக்கிறது.
அப்பட்டமான மனித உரிமை மீறல்
இது ஒரு அப்பட்டமான பகிரங்கமான மனித உரிமை மீறலைத் தவிர வேறு எதுவும் இல்லை. என் அரசாங்கம் அறிவிக்கிற சலுகைகளை பெற எனக்கு உரிமை உண்டு. அதை அதிகார மமதையில் அவமதிக்கிற உரிமை எவருக்கும் இல்லை என்பதுதான் அம்மக்களின் கோபக்கனலாக வெளிப்பட்டு நிற்கிறது. ஏற்கனவே மத்திய பிரதேச பாஜக அரசும் இதேபோல் திமிருடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.