சச்சின் பைலட், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் ஜூலை 24 வரை நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் தடை
ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் வரும் 24-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களும் அணிதிரண்டனர்.
சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணையக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் சச்சின் பைலட் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.
சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களிடம் விசாரிக்க சென்ற ராஜஸ்தான் போலீஸ்.. ரிசார்ட்டில் பரபரப்பு!
தகுதி நீக்க நோட்டீஸ்- வழக்கு
மாறாக துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட், அவரது ஆதரவு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அத்துடன் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீஸுக்கு எதிராக ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
அவகாசம் தரவில்லை என வாதம்
இந்த வழக்கில் சச்சின் பைலட் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடினார். அப்போது, 'சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் புகார் கொடுத்த அன்றே நோட்டீசும் அனுப்பி இருந்தார். அவர்கள் ஆலோசனை பெறுவதற்கு போதிய அவகாசம் வழங்கபடவில்லை என்றார்.
நீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லை
சபாநாயகர் சார்பில் வாதாடிய அபிஷேக் சிங்வி, 'சபாநாயகர் விஷயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. சபாநாயகர் விளக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதன் மீது நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது. சட்டசபையைப் பொறுத்த வரை சபாநாயகர் தான் முடிவெடுப்பார். சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டுதான் முடிவு எடுத்து இருக்கிறார் என்று வாதாடினார்.
நடவடிக்கை எடுக்க தடை
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் பிற்பகலில் இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், சச்சின் பைலட், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது ராஜஸ்தான் சபாநாயகர் வரும் 24-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.