ராஜஸ்தான் காங். ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுமோசம்: நரேந்திர மோடி
ஆல்வர்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுமோசம் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி இன்று அங்கு பல இடங்களில் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஆல்வர் என்ற இடத்தில் இன்று பகல் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் உங்கள் எம்.எல்.ஏவை தேர்ந்தெடுப்பதற்கானது மட்டுமின்றி.. ராஜஸ்தானின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடியதும்கூட..
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் இரவும் பகலுமாக குஜராத்தை பற்றியே பேசுகிறார். அவர் எங்கு போய் பேசினாலும் குஜராத் மாநிலத்தைப் பற்றியே பேசுகிறார். சட்டசபை தேர்தல் என்பது குஜராத்துக்கா நடைபெறுகிறது? ராஜஸ்தான் மாநிலத்துக்குத்தான் தேர்தல் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார் கெலாட்.
அதிக அளவிலான அமைச்சர்கள் சிறையில் இருக்கின்ற பெருமை கூட இந்த ராஜஸ்தான் மாநில அரசுக்குத்தான் உண்டு. இந்த மாநிலத்துக்குரிய நிதி அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் கூட இந்த அரசு நீடிக்கத்தான் வேண்டுமா?
காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களின் குரலை கோரிக்கைகளை கேட்டதே இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில்தான் பழங்குடி இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடைபெறுகிறது.
இந்த மாநில அரசால் ராஜஸ்தான் மக்களுக்கு தூய குடிநீர் கூட வழங்க முடியவில்லை.. இப்படிப்பட்ட இந்த மாநில அரசை அகற்ற வேண்டியது மக்களின் கடமை.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.