ராஜஸ்தானில் காங், ஆட்சியை பிடித்தாலும் லோக்சபா தேர்தலில் ஷாக் காத்திருக்கு... நியூஸ் நேஷன் சர்வே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்திருந்தாலும், வரும் லோக்சபா தேர்தலில் அக்கட்சியைவிட பாஜகவே அதிக இடங்களை வெல்லும் வாய்ப்புள்ளதாக 'நியூஸ் நேஷன்' ஒப்பினியன் போல் தெரிவிக்கிறது.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் 25 தொகுதிகளையும் பாஜக வென்றது. ஆனால், இம்முறை நிலைமை அப்படி இருக்காது.
காங்கிரஸ் கட்சி இம்முறை சுமார் 9 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையிலும், லோக்சபா தேர்தலில் பாஜகதான் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.
கணிசமான சரிவு
16 தொகுதிகளை பாஜக வெல்ல வாய்ப்புள்ளது. பிற கட்சிகள் எந்த தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை. பாஜகவிற்கு 40 சதவீதம் அளவுக்கான வாக்குகள் கிடைக்கும். கடந்த லோக்சபா தேர்தலில் 55.61 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றதோடு ஒப்பிட்டால் இது கணிசமான சரிவாகும்.
வாக்கு சதவீதம் கூடுதல்
காங்கிரஸ் கட்சிக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30.73 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.3 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது நினைவுகூறத்தக்கது.
லோக்சபாவிற்கு வேறு மாதிரி
சட்டசபை தேர்தலில் பாஜக 38.8 சதவீதம் வாக்குகளை பெற்றது. ஆனால், பாஜக 73 தொகுதிகளைத்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 99 தொகுதிகளை வென்று கூட்டணி பலத்தோடு ஆட்சியை பிடித்தது. இருப்பினும் லோக்சபா தேர்தலுக்கு ராஜஸ்தான் மக்கள் டெல்லியை நோக்கி சிந்தனையை வைக்கிறார்கள், ஜெய்ப்பூரை நோக்கி அல்ல என்பதுதான் இந்த கருத்துக் கணிப்பின் நோக்கம்.
மக்கள் பிரச்சினை
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஜெ. சொன்னாலும்கூட ராஜஸ்தான் மக்களில் 43 சதவீதம் பேர், பாஜகதான் தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கட்சி என நம்புகிறார்கள். காங்கிரசுக்கு 39 சதவீதம் பேர்தான் ஆதரவு அளித்துள்ளனர். 42 சதவீதம் பேர் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.