நாதுராமின் கூட்டாளிகள் 3 பேர் கைது... ராஜஸ்தான் போலீஸ் சுற்றவளைத்தது!
சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலையில் தொடர்புடைய நாதுராமின் கூட்டாளிகள் 3 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளி நாதுராமின் கூட்டாளிகள் 3 பேரை அந்த மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 3 பேரும் நாதுராமிற்கு அடைக்கலம் தந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளி நாதுராமை பிடிக்கச் சென்ற போது சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரியபாண்டியனை குற்றவாளிகள் சுட்டதாகவும், தவறுதலாக சக போலீசாரே சுட்டுவிட்டனர் என்றும் சர்ச்சைகள் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நாதுராமின் கூட்டாளிகளான சோட்டு ராம்ஜெத்,நாதுராம்ஜெத், பாபுலால் உள்ளிட்ட 3 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். நாதுராம் கடந்த 3 வாரமாக தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
நாதுராம் எங்கு பதுங்கி இருக்கிறார் என்று கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையன் நாதுராமின் புகைப்படம் ராஜஸ்தானில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு அவனை தேடும் பணியை ராஜஸ்தான் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை மட்டுமின்றி சென்னையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கொள்ளை சம்பவங்களிலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கவும், காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை யார் சுட்டது உள்ளிட்ட கேள்விகளுக்கு நாதுராமை கைது செய்தால் மட்டுமே விடை கிடைக்கும்.