என்னலாம் பிடிக்கவே முடியாது... தில்லாக துப்பாக்கியுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட நாதுராம்!
சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் கொலையில் ராஜஸ்தான் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி நாதுராம் முகநூலில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தில்லாக வெளியிட்டுள்ளான்.
ஜெய்ப்பூர் : சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் நகைக்கடை கொள்ளை வழக்கில் கடந்த ஒரு மாதமாக தேடப்படும் வரும் குற்றவாளி நாதுராம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தில்லாக வெளியிட்டுள்ளான்.
கடந்த மாதம் சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி ராஜஸ்தான் சென்றது சென்னையை சேர்ந்த தனிப்படை போலீஸ். அப்போது டிசம்பர் 12ம் தேதி அதிகாலையில் கொள்ளையன் நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகள் செங்கல் சூளையில் பதுங்கி இருந்த போது அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
கொள்ளையன் நாதுராமை பிடிக்க முற்பட்ட போது ஆய்வாளர் பெரியபாண்டியனின் துப்பாக்கியை எடுத்து குற்றவாளி சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜஸ்தான் போலீஸ் குற்றச்சாட்டு
தமிழக போலீசார் ராஜ்ஸ்தான் போலீசின் உதவியை நாடாமல் தனிப்பட்ட முறையில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றனர் என்று ராஜஸ்தான் மாநில போலீஸ் குற்றம்சாட்டியது. நாதுராம் தனியாக பதுங்கியிருப்பதாக துப்பு கொடுப்பவர் தவறான தகவல் தந்துவிட்டதாக தமிழக போலீசார் கூறினர்.
நாதுராம் தப்பியோட்டம்
இறுதியில் கொள்ளையன் நாதுராம் அங்கிருந்து தப்பிவிட்டான் என்பது மட்டும் உண்மை. காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது சக போலீஸ் முனிசேகர் என்று ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேடப்படும் குற்றவாளி நாதுராம்
இந்நிலையில் உண்மையில் அங்கு நடந்தது என்ன என்ற விவரங்கள் அறிந்த குற்றவாளி நாதுராமை ஒரு மாதமாக ராஜஸ்தான் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவனை கைது செய்தால் மட்டுமே சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளையின் போது திருடப்பட்ட நகைகளை மீட்க முடியும்.
தில்லாக புகைப்படம் வெளியீடு
தொடர்ந்து நாதுராம் தலைமறைவாக இருப்பதாக ராஜஸ்தான் போலீசார் கூறி வரும் நிலையில் அவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளான். கையில் துப்பாக்கியுடன் தில்லாக போஸ் கொடுக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கொந்தளித்துப் போயுள்ளனர்.