ரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா? ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி இருவரையும் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல்கள் வருகிறது.
ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக கடந்த மாதம் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் போர்கோடி தூக்கினார். ஆட்சியில் தனக்கு உரிய மரியாதை இல்லை என்று கூறி சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார்.
இதனால் இவரின் துணை முதல்வர், கட்சி தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இவர் பாஜகவோடு சேர்ந்து ஆட்சியினை கவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு 18 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கொடுப்பதாக தகவல்கள் வந்தது. அதோடு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு தனக்கு எம்எல்ஏ பலம் இருப்பதாக அசோக் கெலாட் கூறினார்.
ராஜஸ்தான் அரசியலில் திடீர் மாற்றம்...14ல் நம்பிக்கை வாக்கெடுப்பு...சச்சின் ராகுல் இன்று சந்திப்பு!!
முடிவு என்ன
சட்டசபையை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக முயன்று வந்தார்.தனக்கு மொத்தம் 102 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து இருந்தார். அதேபோல் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை உடனே தகுதி நீக்கம் செய்யவும் முடிவு செய்து இருந்தார். சட்டசபையை கூட்ட தொடர்ந்து ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவும் கடும் இழுபறிக்கு பின் அனுமதி கொடுத்தார்.
இன்னும் 4 நாட்கள்
இன்னும் 4 நாட்களில் ராஜஸ்தானில் சட்டசபை கூட உள்ளது. இந்த நிலையில் அதிரடி திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி இருவரையும் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல்கள் வருகிறது. கசப்புகளை மறந்து மீண்டும் கட்சிக்குள் வர தயார் என்று சச்சின் பைலட் தூதுவிட்டு, பின் ராகுலை சென்று நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது.
உண்மை என்ன
அதோடு சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோரும் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் காங்கிரஸ் தலைமையிடம் அளித்ததாக கூறப்படுகிறது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அனுமதிக்கிறோம், என்று கூறி காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் காங்கிரஸ் முகாமிற்கு திரும்பி இருப்பதாகவும் கூறுகிறார்கள். நாட்களில் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் காங்கிரஸ் முகாமிற்கு திரும்பி உள்ளனர்.
பிரியங்கா
சச்சின் பைலட்டின் இந்த முடிவுக்கு பின் பிரியங்கா காந்தி இருக்கிறார் என்கிறார்கள். பிரியங்கா காந்தி ஏற்கனவே சச்சின் பைலட்டை சமாதானம் செய்ய முயன்ற அதில் தோல்வியும் அடைந்தார். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் சச்சினிடம் பேசிய பிரியங்கா, அவரின் மனதை மாற்றி உள்ளார் என்கிறார்கள். நீங்கள் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி விடுங்கள்.. உங்களுக்கான மரியாதை கிடைக்கும்.
மீண்டும் வாருங்கள்
காங்கிரசில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் நடக்க உள்ளது. உங்களுக்கான மரியாதை இனி கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறி பிரியங்கா, சச்சினை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக காங்கிரஸ் தலைமையில் விரைவில் வர இருக்கும் மாற்றத்தை குறிப்பிட்டு பிரியங்கா பேசினார் என்று கூறுகிறார்கள். விரைவில் சோனியாவிற்கு பதிலாக காங்கிரசில் புதிய தலைவர் வர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.