போலீசார் துப்பாக்கியை வைத்தே சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய ராஜஸ்தான் கொள்ளையன்!
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது தமிழக போலீசாரின் துப்பாக்கியை வைத்தே காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டு கொன்றுவிட்டு கொள்ளை குற்றவாளி தப்பியுள்ளார்.
Recommended Video
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது தமிழக போலீசாரின் துப்பாக்கியை வைத்தே காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டு கொன்றுவிட்டு கொள்ளை குற்றவாளி தப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை கொளத்தூர் புதிய லட்சுமி புரத்தில் முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த நவம்பர் 16ல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மாடிக் கடையை வாடகைக்கு எடுத்த கொள்ளையர்கள் முதல் தளத்தில் இருந்து துளையிட்டு 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர். இந்த நகைக் கடை கொள்ளை தொடர்பாக ஏற்கனவே சென்ராம் , கேலாராம், சங்கர்லால், தவ்ராம் கைது செய்யப்பட்டனர்.
சென்ராமின் மகன் நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க ராஜஸ்தானுக்கு தனிப்படை போலீஸ் சென்றிருந்தது. அப்போது ஜெய்த்ரான் என்ற இடத்தில் நாதுராம் தன்னுடைய குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். அங்கு சென்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் துப்பாக்கியாலே
நாதுராமை கைது செய்து வெளியே அழைத்து வந்த போது திடீரென குற்றவாளி ஆய்வாளர் பெரியபாண்டியின் துப்பாக்கியை எடுத்தே அவரையும், துணை ஆய்வாளரையும் சுட்டுள்ளார். இந்த சம்பத்தில் தான் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை
துணை ஆய்வாளர் முனிசேகர் தோள்பட்டையில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரும் சரிந்து விழுந்துள்ளார். போலீசாரை சுட்டுவிட்டு கொள்ளையன் நாதுராம் தப்பியோடியுள்ளதாக ராஜஸ்தான் போலீசார் தெரிவிக்கின்றனர். தோளில் குண்டு துளைக்கப்பட்ட முனிசேகருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் விரைந்துள்ள போலீஸ்
மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் குற்றவாளியை கைது செய்ய சென்ற தமிழக போலீசார் இது குறித்து உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக போலீஸ் ராஜஸ்தான் விரைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
|
அவசர கதி செயலால்
ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சரியான முன் ஏற்பாடுகள் இன்றி அவசர கதியில் கொள்ளையனை பிடிக்கச் சென்றதே திறமையான காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.