விடாத கனமழை... வெள்ளக்காடானது ராஜஸ்தான்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுரு, பிலானி, சிகர், ஜெய்ப்பூர், அஜ்மீர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளது..
இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாலைகள் சேதமடைந்துள்ளன.
சுருவில் தெருக்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. மேலும் வீடுகள், கடைகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. தங்கள் வீடுகளுக்குள் தேங்கியுள்ள நீரை மக்கள், வாளிகள் மூலம் இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.
அதே சமயம் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் கலந்துள்ளது. இதனால் தெருக்கள் சகதியாக காணப்படுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தின் சில பகுதிகளில் மேலும் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.