இனி சில்மிஷம் செய்ய பெண்களைத் தொட்டால் “ஷாக்” அடிக்கும்- ராஜஸ்தான் மாணவரின் "அட்டாக்" கண்டுபிடிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் சில்மிஷத்தில் ஈடுபடும் ஆண்களை வீழ்த்த ஷாக்கிங் கிளவுஸ் என்னும் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அந்த மாணவர் பெயர் நிரஞ்சன் சுதார். 17 வயதான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் அகோர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பிளஸ் 2 வில் கலைத்துறையை முதன்மை பாடமாக எடுத்துள்ள நிரஞ்சன் சுதார் மின்கருவியை கையாள்வதிலும், எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
பெண்களைக் காப்பாற்ற:
இந்நிலையில் டெல்லியில் சமீபத்தில் நடந்த மாணவி ஜோதி சிங் கொலை சம்பவம் அவரை வருத்தமடைய வைத்துள்ளது. இதனையடுத்து இதுபோன்ற ஆண்களிடம் இருந்து பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள புதிய கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.
ஷாக்கிங் கையுறை:
இதற்காக 2 ஆண்டுகள் உழைத்து அந்த கடுமையான ஆராய்ச்சியில் உருவானது தான் "ஷாக்கிங் கிளவுஸ்". 150 கிராம் எடையில் கையுறை போன்ற வடிவமைக்கப்பட்ட இதனுள் சிம்கார்டு, சி.சி.டி. கேமிரா மற்றும் 3.4 வால்ட் மின்சக்தி கொண்ட பேட்டரி போன்றவை பொருத்தப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு அளிக்கும் கருவி:
தனியாக செல்லும் பெண்கள் இந்த கையுறையை அணிந்து கொண்டால் போதும். ஆண்கள் யாராவது அவர்களிடம் வம்பு செய்து தொட்டால் ஷாக்கிங் கிளவுசில் உள்ள 3.4 வால்ட் மின்சாரம் 240 வால்ட் மின்சார சக்தியாக மாறி அவர்களை வீழ்த்திவிடும்.
குவியும் பாராட்டுகள்:
அதோடு அதில் உள்ள கேமிரா அந்த ஆண்களை படம்பிடிக்கும். அந்த பெண் இருக்கும் இடம் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தெரியவரும்.
இந்த கருவியை தயாரிக்க 500 ரூபாய்தான் செலவானதாக மாணவன் நிரஞ்சன் சுதார் தெரிவித்தார். இந்த கண்டுபிடிப்பால் மாணவர் நிரஞ்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.