பழங்குடியின பெண்ணுக்கு விஷம் கொடுத்து பலாத்காரம் - கொடூரர்களைத் தேடும் போலீஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மத்தியபிரதேசத்திற்கு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பழங்குடியினப் பெண்களை விஷம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா என்ற ஊரில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பழங்குடியின பெண்கள் வந்தனர். நிகழ்ச்சி முடிந்த உடன் இரண்டு பெண்களை சிலர் வனப்பகுதிக்கு கடத்திச் சென்றனர்.
அந்த பெண்களை பலாத்காரம் செய்தனர். இதில் ஒரு பெண் அதிகம் முரண்டு பிடித்ததால் விஷம் கலந்த பாலை கொடுத்து மயக்கமடையச் செய்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இருவரையும் குணா நகரின் அருகில் இருந்த ரயில் நிலையத்தில் விட்டுச்சென்றனர்.
ஆய்வுக்கு சென்ற இடத்தில் ரூம் போட்டு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட எம்எல்ஏ!
பாதிக்கப்பட்ட பெண்கள் அரை மயக்க நிலையில் ரயில் ஏறி தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். பரன் ரயில் நிலையத்தில் இறங்கிய உடன் மிகவும் சோர்வாக இருந்த தனது சகோதரியை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்தார். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் மல்க கூறி பரன் காவல்நிலையத்தில் அந்தப்பெண் புகார் அளித்தார். தங்களைத் தூக்கிச்சென்றவர்களில் ஒருவன் பெயர் பங்கஜ் கலால் என்று அடையாளம் கூறினார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் தகவல் அறிக்கையை குணா நகர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பழங்குடியின பெண்களை பலாத்காரம் செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.