பெண்கள் ஜீன்ஸ், செல்போன் பயன்படுத்தப் கூடாது... ராஜஸ்தான் கிராம பஞ்சாயத்து அதிரடி!
கலாச்சார சீரழிவிற்கு வழிவகுப்பதாலும், பாலியல் குற்றங்களை தடுக்கவும் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு ராஜஸ்தான் மாநிலக் கிராமம் ஒன்று தடை விதித்துள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் என்ற கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் ஆடவரை ஈர்க்கும் ஆடைகளை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலாச்சார சீரழிவிற்கு வழிவகுப்பதால் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதித்து ராஜஸ்தான் மாநிலம் பல்தியாபுரா பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பேசும் போது, ஆண்களை ஈர்க்கும் வகையில் பெண்கள் ஆடைகளை அணியக் கூடாது, ஜீன்ஸ், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளோம்.
மேற்கத்திய கலாச்சார முறையை பின்பற்றுவதன் மூலம் கலாச்சார சீரழிவு ஏற்படுவதோடு, பாலியல் வன்கொடுமை குற்றங்களும் அதிகரிக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக விளக்கமும் தருகிறார்.
கிராமத்திலுமா?
தற்போதைய காலகட்டத்தில் கிராமத்து பெண்கள் கூட மேற்கத்திய ஆடைகளையே அணிகின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். அதோடு அவர்களின் செயல்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம், என்கிறார் பஞ்சாயத்து தலைவர் கனசில் ஹரியோம் சிங் பார்மர்.
சீரழிவு
பெண்கள் ஆடை சுதந்திரத்தை கையில் எடுப்பதாலேயே பலாத்காரம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். கலாச்சார சீரழிவு என்று வந்தால் அதை ஒரு போதும் கிராமத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறுகிறார் பஞ்சாயத்து தலைவர்.
மது, புகையிலையில்லா கிராமங்கள்
கஷ்வாஷ் இனத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசிக்கும் பல்தியாபுரா கிராமத்தைப் போலவே கன்சில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுப்பழகத்தை ஒழிப்பதற்காகவும் இந்த கிராம சபையில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
ரூ. 500 சன்மானம்
கிராமத்தில் இருக்கும் எவரேனும் மது அருந்தினால் ரூ. 1,100 அபராதம், மது அருந்துவோர் பற்றி புகார் அளிப்பவருக்கு ரூ.500 சன்மானம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளிகும் புகையிலைப் பொருட்கள் விற்பனைத் தடை செய்யப்பட்டுள்ளது.
அபத்தம்
உயிருக்கு கேடு விளைவிக்கும் புகையிலை, மதுபானம் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என்பது தான் அபத்தமாக இருக்கிறது.
சட்டவிரோதம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டோல்புர் மாவட்ட துணை கலெக்டர் மது, புகையிலைக்கு தடை விதிப்பது வரவேற்க வேண்டிய விஷயம். பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிப்பது சட்டவிரோதமானது, இது வரை இந்த தீர்மானம் குறித்து எந்தப் புகாரும் வரவில்லை, விரைவில் உரிய புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.