22 ஆண்டுகளுக்குப் பின் நடந்த திருமணம்... திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்!
நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியால் ராஜ்காட் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியால், அவ்வூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்டத்தில் உள்ளது ராஜ்காட் என்ற குக்கிராமம். சம்பல் ஆற்றங்கரையில் உள்ள இக்கிராமத்தில் 350 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
சாலை, மின்சாரம், குடிநீர் குழாய் என எவ்வித அடிப்படை வசதிகளும் இந்தக் கிராமத்தில் இல்லை. மருத்துவ வசதி கூட இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரே ஒரு அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே இந்த ஊரின் வளர்ச்சி எனலாம். இதில் இந்தக் கிராமத்தில், ஒரு சில மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள, 125 பெண்களில், இருவருக்கு மட்டுமே, தங்கள் பெயரை எழுத தெரியும். இங்குள்ள பெண்கள், 'டிவி, பிரிஜ்' ஆகியவற்றை பார்த்தது கூட இல்லை.
சுத்தமான குடிநீருக்கும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும். எனவே, ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடும் சமயங்களில் சுத்தமில்லாத தண்ணீரையே குடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
இப்படியாக அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் வாழும் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க யாருமே முன்வரவில்லை. எனவே, கடந்த 22 ஆண்டுகளாக இந்த ஊரில் திருமணமே நடைபெறவில்லை.
இந்நிலையில், அஸ்வினி பராசர் என்ற மருத்துவ மாணவர், ராஜ்காட் கிராம மக்களின் பரிதாப வாழ்க்கை குறித்தும், அங்குள்ள இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருப்பது குறித்தும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியை செய்து தரக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு அவர் கடிதமும் எழுதி அனுப்பினர்.
அஸ்வினி பராசரின் முயற்சியின் பலனாக தற்போது ராஜ்காட் கிராம இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்த ஊரில் திருமணம் நடைபெற்றுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தத் திருமணத்தை ஊர் மக்கள் திருவிழா போன்று ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.