ராஜஸ்தானி எழுத்தாளர் நந்த் பரத்வாஜூம் சாகித்ய அகாடமி விருதை பரிசுத் தொகையுடன் திருப்பி ஒப்படைத்தார்!
ஜெய்ப்பூர்: தாத்ரி படுகொலையைக் கண்டித்து ராஜஸ்தானி எழுத்தாளர் நந்த் பரத்வாஜூம் தமக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தியைக் கிளப்பிவிட்டு இஸ்லாமிய முதியவர் இக்லாலை மதவெறியர்கள் படுகொலை செய்தனர். இதற்கு முன்னர் கல்பர்கி, பன்சாரே, தபோல்கர் போன்ற பகுத்தவறிவாளர்கள் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படி அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையற்ற மதவெறித்தன்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்டிக்காததற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதும் தங்களுக்கு வழங்கப்பட்ட சாக்திய அகாடமி விருதுகளை திருப்பி ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது ராஜஸ்தானி எழுத்தாளர் நந்த் பரத்வாஜூம் இணைந்துள்ளார். அவர் தமது விருதுடன் பரிசுத் தொகை ரூ50 ஆயிரத்தையும் திருப்பி ஒப்படைத்திருக்கிறார். இவர் 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.