கோவாவில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்?
பனாஜி: கோவா மாநில சட்டசபை தேர்தலில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவா மாநில சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது. ஆகையால் அம்மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது கோவா சட்டசபை. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், மகாராஷ்டிரா கோமந்தக், கோவா விகாஷ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்தான் இதுவரை தேர்தல் களத்தில் இருந்தன.
களமிறங்கும் ஆம் ஆத்மி
தற்போது ஆம் ஆத்மி கட்சியும் கோவா தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், கோவாவின் 40 தொகுதிகளும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அறிவித்தார்.
முதல்வர் வேட்பாளராக ராஜ்தீப் சர்தேசாய்?
இதனிடையே கோவாவில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக மூத்த பத்திரிகையாளரும் இந்தியா டுடே டிவியின் கன்சல்டிங் எடிட்டருமான ராஜ்தீப் சர்தேசாய் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பனாஜி பேரணியில் ராஜ்தீப் சர்தேசாயும் கலந்து கொண்டதைத் தொடர்ந்து இத்தகைய செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
சர்தேசாய் விளக்கம்
இது குறித்து தி நவ்ஹிந்த் டைம்ஸ் ஏட்டுக்கு கருத்து தெரிவித்த ராஜ்தீப் சர்தேசாய், கோவா மக்கள் நான் தான் முதல்வராக வேண்டும் என விரும்பினால் நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பத்திரிகைதுறையை விட்டு விலக அவர்கள் விரும்பமாட்டார்கள் என நினைக்கிறேன். வழக்கறிஞர்கள், மருத்துவர்களைப் போல பத்திரிகையாளர்கள் தங்களது துறையை விட்டு அரசியலுக்கு வரக் கூடாது. நான் பத்திரிகைதுறையை விட்டு விலகும் எண்ணமே இல்லை... அரசியலில் குதிக்கும் எண்ணமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பதிவுகள்
41 வயதாகும் ராஜ்தீப் சர்தேசாய் பிறந்தது குஜராத். ஆனால் அவரது தந்தையான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாய் கோவாவைச் சேர்ந்தவர். அத்துடன் ஆம் ஆத்மி கட்சியில் ஏகப்பட்ட மாஜி பத்திரிகையாளர்கள் இருக்கின்றனர். டெல்லி துணை முதல்வராக இருக்கும் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அஷூதோஸ் என இந்த பட்டியல் நீளும்.
ஆகையால் ராஜ்தீர்ப் சர்தேசாயும் ஆம் ஆத்மியுடன் கை கோர்க்கவும் அவரை கோவா முதல்வர் வேட்பாளராக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களாக கோவா குறித்து தமது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து பல பதிவுகளையும் போட்டு வருகிறார் ராஜ்தீப் சர்தேசாய்.